வியாழன், 6 மார்ச், 2008

எழுதுகோல்!

மையிட்டக் கோலதன்
மெய்பிடித்து –நன்
செய்யிட்ட ஏரன்ன
சேறடித்து...

பொய்யற்ற மெய்கொண்ட
பொருள்விதைத்து –நாம்
உய்வுற்று வாழவோர்
உரைவகுத்து...

உடுக்கைகொள் பையெனும்
உறைகிடக்கும் -நற்
தடக்கைகொள் எழுதுகோல்
தகைவிரிப்பேன்!

ஆலிலை முனையொக்கும்
கோல்முனைகாண் -அது
சாலைக்கொண் டள்ளொணா
சமுத்திரம்தான்!

தோள்வலி இலானையும்
திறனாக்கிடும் -எழுத்
தாளனாய்ப் புலவனாய்
ஆளாக்கிடும்!

மாளிகை மண்ணாகும்
வகைகற்றகோல் -சிறு
தூளியைத் தூணாக்கும்
தொகைகற்றகோல்!

நாவென்று நாம்வாழ
நானிலத்தே –ஓர்
தாவின்றிக் கற்பிக்கும்
தனிப்பெருங்கோல்!

மூப்பென்ற ஒன்றுடலை
மோகித்தபின் -கைக்
காப்பென்று ஆகும்மரக்
கம்பென்றகோல்!

அவ்வூண்று கோல்தாங்கி
அடங்கிடாமுன் -நம்
கையூண்றும் ஒப்பிலாக்
கோல்எழுதுகோல்!

எண்முனைந் தோதியதை
ஏற்றுஒழுகும் -பெண்
கண்முனை யொத்தகோல்
தாளிலழுவும்!

மாடிமனைத் துயின்றிடும்
மாந்தருக்கும் -தெருக்
கோடிமுனைத் துன்புறும்
கூட்டத்திற்கும்...

ஏட்டில்முனை வைத்தழுவும்
எழுதுகோலே –அவர்
பாடுயற பகுத்தறிவின்
திறவுகோலே!

பொருள்:- உடுக்கை –உடை; தூளி –தூசி; தொகை –கணக்கு;

அகரம்.அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக