சனி, 9 ஆகஸ்ட், 2008

அமைதிப் பூங்கா!



பூக்கள் நிறைந்த சாலைகளும்
      புள்ளின மாடும் சோலைகளும்
ஆக்கும் எந்திர ஆலைகளும்
      ஆற்றல் கைகளும் தோள்வலியும்
பாக்கள் நிறைந்த தமிழ்மொழிபோல்
      பசுமை படர்ந்த சிங்கைதே
னீக்கள் நாடும் பூவனம்போல்
      எழில்சேர் அமைதிப் பூங்காவாம்!

கலவரம் அறியாக் கன்னியிவள்
     கருணை அமைதியின் செல்லமகள்
பலவினம் வாழும் எல்லையிவள்
     பகையொன் றறியாப் பருவமகள்
அலைகடல் நடுவே வான்பிறைபோல்
     அமைந்த அமைதியின் உருவமிவள்
நிலவரம் பில்குறள் அளவெனினும்
     நேர்குறள் பொருளின் செறிவுடையாள்!

மெல்லினம் அரசாய் அமைந்ததனால்
     மேன்மைகள் நாட்டில் நடைபோடும்
வல்லின அரக்கரைச் சட்டம்தன்
     வலையில் வீழ்த்திச் சிறைபோடும்
பல்லினம் வாழும் நாடெனினும்
     பண்போ டொற்றுமை பேணுவதால்
இல்லையொன் றிங்கே பகையுணர்வு
     இதனால் கண்டார் நிதமுயர்வு!

காவலர் பணிக்கிங் காளுண்டு
     கள்வர் கயவர் எவருமில்லை
மேவிய நீதி மன்றமுண்டு
     கோவிலைப் போலன்றி வேறில்லை
தீவிர வாதம் தலைதூக்கித்
     திக்கெலாம் தாண்டவ மாடுகையில்
தீவிர அமைதி பேணுவதில்
     சிங்கைக் கியாதொர் நிகருமில்லை!

கள்வர் இல்லை களவுஉண்டு
     காதலர் கண்செயும் களவுஅது...
கொள்வார் இல்லை எடுத்தலுண்டு
     கொடுப்பார் புகழவாய் எடுத்தலது...
கல்லார் இல்லை கரத்தலுண்டு
     கவியுள் செம்பொருள் கரத்தலது...
இல்லார் இல்லை இரத்தலுண்டு
     இறையடி சேர்ந்திடும் இரத்தலது!

இனத்தால் கலவரம் இங்கில்லை
     இருளில் வீழா மதியுளதால்...
தனத்தால் ஏற்றத் தாழ்வில்லை
     சட்டம் தன்பணி ஆற்றுவதால்...
தனித்தேன் ஈப்போல் ஒன்றிடுவார்
     தனைப்போல் பிறரைக் கருதுவதால்...
மனத்தால் கெடுவார் எவருமில்லை
     மதியால் விதிவெல அறிந்துளதால்...

எப்படை வரினும் எதிர்த்துநின்றே
     இசைசேர்த் திடுவார் இனம்காப்பார்
தப்படி வைத்தெவர் தறுக்கிடினும்
     தப்புணர்த் திடுவார் திருத்திடுவார்
முப்படை நாற்றிசை காவலுறும்
     முறையுண் டெனினும் போரில்லை
செப்பிடின் ஆயுதம் அமைதிக்கே
     சேர்த்திடும் சிங்கைபோல் வேறில்லை!

நாடுகள் பலவும் நானிலத்தே
     நலிவுறும் உட்பகைப் பூசலினால்
பீடுறு அமைதி நிலையிழந்தே
     பெரிதும் துயர்படும் காலையிலும்
காடுறு அமைதியை நாட்டினிலே
     கண்டதென் நாடு? இந்நாடே!
நாடிது அமைதிப் பூங்காவாய்
     நாட்டிய நல்லர சோங்குகவே!

அகரம்.அமுதா

2 கருத்துகள்: