வியாழன், 22 ஏப்ரல், 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (8)


களப்பில்* உணவின்றிக் கண்ணீர் வழிய
அளப்பில்* தடுப்பவர்க்(கு) அஞ்சி –உளப்பி*ப்
பிறந்தநா(டு) எண்ணித்தன் பிள்ளையர் வாழக்
கறு*க்கொண் டவர்க்கியார் காப்பு? (71)

காணலரால்* எம்மவர் காணி* இழந்துநலங்
காணக் கடந்தார் கடல்நீரை; –தோணி
கவிழ்ந்தும், பசித்தும், கரைகாணா(து) ஆங்கே
தவித்தும் இறந்தார் தனித்து! (72)

தனிவிடப் பட்ட தமிழினம்பா(ர்) எங்கும்
துணிவுடன் ஏகித் துளிர்த்தார் –இனியும்நாம்
ஏமாளி யாதல் இழிவென்(று) இசைந்தேற்றார்
கோமானாய் உன்னைக் குறித்து! (73)

குறிவைத்துக் கொன்றார் கொடியர்; அவரைப்
பொறிவைத்து வெல்லல் பொருந்தும் –நெறிவைத்த
நெஞ்சினாய்! எம்மின் நிறைகாக்க வேண்டிநீ
நஞ்சணிந்து கொண்டாய் நயந்து*! (74)

நயந்துசிவன் அற்றைநாள் நஞ்சினை ஏற்றான்;
வியப்பின் முதலே! விரும்பி –அயிர்க்கா(து)*
ஒருநீளத் தாம்பில் உணர்ந்தேற்ற நீயும்
கருநீலத் தொண்டையன் காண்! (75)

காணக் கிடைக்காக் கவினே!* உனையேயெம்
மாண*த் துணையாய் மனமேற்றோம்-மான
மறவா! எமையாள் இறைவா!வா! நீயே
இறவாப் புகழின் இருப்பு! (76)

இரும்பு மனிதா இதுகேள்! எமையுன்
அரும்பு மனத்தால் அணைத்தாய் –துரும்பும்
எமைத்தீண்டா வண்ணம் எழுந்தருள் செய்தாய்
உமையேற்றோம் உள்ளம் உவந்து! (77)

உவட்டும்* உடலர்; உளத்தில் கயவர்;
எவர்க்கும் அடங்கா இழிந்தோர்த் –தவறெலாம்
சொல்லி அடித்தா(ய்)இத் தொல்லுலகில் உன்புகழைச்
சொல்லும்வல் வெட்டித் துறை! (78)

துரையப்ப னைக்கொன்ற தூயவனே! பொன்னின்
வரை*யொத்த தோளுடைய மள்ளா!* –வரைவில்*
உறுதி மனத்தில் உடையோய்!எஞ் ஞான்றும்*
இறுதியுனக்(கு) உண்டோ இயம்பு! (79)

இயக்கம் அழிக்க இயன்றார் எனினும்
வியக்கும் வகையில் வளர்த்தாய் –தயக்கம்
அடைந்த குழுமாட்டுக் கூட்டத்தார் அஞ்சி
நடைகட்டிக் கொண்டார் நலிந்து! (80)

களப்பு –கடலில் ஆழமில்லாத இடம் (சிறுசிறு மணல்திட்டு); அளப்பில் தடுப்பவர்க் கஞ்சி -தங்கள் நாட்டு எல்லைக்குள் வராதவாறு தடுப்பவர்க்கு அஞ்சி; உளப்புதல் –நடுங்குதல்; கறு –மனவுறுதி; காணலர் –பகைவர்; காணி –உரிமையான இடம்; இசைந்து –உடன்பட்டு; கோமான் –அரசன்; நயத்தல் –விரும்புதல்; அயிர்க்காது –ஐயமில்லாமல்; தாம்பு –கயிறு; கருநீலத் தொண்டையன் –சிவன்; கவின் –அழகு; மாணம் –மாட்சிமை; உவட்டுதல் –அருவருக்கத்தக்க; மள்ளன் –மறவன்; வரை –மலை; வரைவில் –முடிவில்லாத; எஞ்ஞான்றும் –எப்பொழுதும்; குழுமாடு –காடையர்.

அகரம் அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக