வியாழன், 28 ஜனவரி, 2010

“லீ” வாழ்க!

சிற்றெறும்பின் அணியென்பேன் சாலை யெங்கும்
.....செல்லுகின்ற ஊர்திகளை; சோலை தன்னைச்
சுற்றுகின்ற தும்பிகளே வான ஊர்தி!
.....சிரிக்கின்ற விளக்குகளே விண்மீ னாகும்!
பற்றுவிட்ட துறவிகள்போல் தோற்றம் காட்டிப்
.....பாங்காக நிற்கின்ற கட்டி டங்கள்
ஒற்றுவிட்ட வெண்பாவே! ஓங்கி நிற்கும்
.....ஒப்பில்லா மரங்களெல்லாம் நிழற்கு டைகள்!

சத்தியமாய் சேய்மனமே தூய்மை தன்னைச்
.....செப்புதற் கேற்றதொரு உவமை யாகும்!
சச்சரவு சஞ்சலங்கள் சூழ்ச்சி தீது
.....செய்தறியா மாந்தரெல்லாம் தேனீ யாவர்!
இத்தனையும் ஒரணியாய் இணையப் பெற்ற
.....இளஞ்சிங்கை நாட்டிற்கென் உவமை சொல்வேன்?
இச்சகத்திற் கேசிங்கை நெற்றிப் பொட்டாம்!
.....இயற்றிவைத்த லீகுவான்யூ என்றும் வாழ்க!

அகரம் அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக