செவ்வாய், 6 ஏப்ரல், 2010

தமிழும், தமிழரும்!

நெஞ்சினில் மறத்தை நட்டுவ ளர்த்தும்
நேர்மையின் வழிதனில் சென்ற
மஞ்சினை ஒத்த வண்டமிழ் மக்கள்
மானமே உயிரெனக் கொண்டு
விஞ்சிய கல்வி மிகுப்புகழ் செல்வம்
விளங்கிட பாரினில் முந்நாள்
அஞ்சிய பேர்கட் கருள்மழை பொழிந்தே
அழகுற வாழ்ந்தனர் நன்றாய்

காய்ச்சிய இரும்பைக் கைதனில் எடுத்துக்
கண்முனம் நேரெதிர் நன்று
பாய்ச்சிட வரினும் பகையெனக் கருதாப்
பாங்குடன் நெஞ்சினை நிமிர்த்தும்
மாட்சிமை படைத்த தமிழரின் வாழ்வில்
வளர்ச்சியைக் கண்டுபொ றுக்கா
ஏச்சுடை பலர்தம் இரண்டகப் போக்கால்
இடர்பல உற்றனர் கண்டீர்!

செந்தமிழ் அழிப்பைத் திறம்பட புரிந்தால்
சிதைகுவர் தமிழரென் றாங்கே
வந்தவர் எண்ணி வடமொழி புகுத்தி
வளர்தமிழ் சிதைத்தனர் நன்றாய்
இந்தபே ரிடரால் கன்னடம் தெலுங்கோ(டு)
இன்மலை யாளமும் தோன்ற
முந்தைய தமிழர் கன்னடர் தெலுங்கர்
முகிழ்மலை யாளரும் ஆனார்!

எஞ்சிய தமிழர் இன்றமிழ் வளர்ப்பை
இடையறா தியற்றிய தாலே
நஞ்சினை முறிக்கும் மூலிகை அன்ன
நறுந்தமிழ் வளர்ந்ததென் றாலும்
அஞ்சிடும் வகையில் ஆங்கில வரவால்
அருந்தமிழ் அழிவதும் நன்றோ?
எஞ்சிய தமிழர் தமிங்கில ரானால்
எப்படி வாழ்ந்திடும் தமிழும்?

கனித்தமி ழோடு பலமொழிச் சொற்கள்
கலந்துகி டப்பது கண்டு
தனித்தமி ழாளர் தணிந்திடாப் பற்றால்
தடுத்திட முனைந்தனர் அஃதை
நனிமிக நெருங்கி ஏற்றிடல் வேண்டும்
ஏற்றுந டப்பதி னாலே
இனித்தமிழ் வாழும் தமிழரும் வாழ்வர்
இவ்வுல கேற்றிடு மாறே!

அகரம் அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக