வியாழன், 6 நவம்பர், 2008

சிங்கை பெற்ற செல்வம்! முகம்மது ரஃபி!


- - - - - - - - - முகம்மது ரஃபி--- அகரம்.அமுதா--- பொன்.மாகாலிங்கம்.

காலைக்கதிர் முளைக்கும் முன்-ஓர்
சோலைக்குயில்
ஒலி அலைவழி
ஒலியெழுப்பும்...

அதைக்-
கேட்டெழுந்தத் தென்றல்
கீழ்த்திசை கட்டிலில்
கிடந்துறங்கும் கதிரைத்
துயிலெழுப்பும்!

சேவல் கூவிச்
செங்கதிர் எழும் -இதை
ஊரறியும்;
உலகறியும்!

ஓர்-
பூவை கூவிப்
பொழுது புலர்வதை
வானொலி கேட்கும்
மாந்தர்தம்
காதறியும்;
கருத்தறியும்!

அக்குயிலின் பேர்
முகம்மது ரஃபி- என
மூலைக்கு மூலை
மாந்தர்தம்
மூளைக்கு மூளை
எழுதி(யி)ருக்கும்...!

-- -- --

அரிநிகர்த்த –அவ்
அரியவனின் நிறம்
ஊதா;

குரலில் கொஞ்சம்
தேனைக் குழைப்பார்
அதனைத் துய்க்காது
அளிகள் ஓடிப்போய்
மலர்களில் மகரந்தத்தை
ஊதா!

-- -- --

அவர்-
சாதனைகளின் குதிர்;
எப்படி சாதிக்கிறார்
என்பது
சாதனைகளாலும்
அறியப்படாத புதிர்!

சாதிக்க வேண்டி
மௌனமாய் இருந்து
மௌனத்தைச் சோதிப்பார்;
மௌனம்- இவரிடம் தோற்று
மௌனமானபின்
மலரிதழ் பூத்து
வாதிப்பார்!

இருமுப்பது மணிகள்
இடையறாது
நிகழ்ச்சி படைத்து
சாதிப்பார்;
இவர்போல்- ஆரும்
இயன்றிடின்- இயன்றவர்
தொண்டை கட்டிப்
பாதிப்பார்!

-- -- --

நூலாய்ந்த புலவோரும்;
கற்றாய்ந்த கவியோரும்
சூழ்ந்திருக்க...

என்போல்
கத்துக் குட்டிகளும்
கடைதேறக்
கவிதை நேரம் கண்டார்!

கிழமையில்
காரி வந்தால்
கவிதை ஒலிக்கும்...
அந்த வாய்ப்பு
ரஃபி தந்தது!

அதன் வழிதான்
கவியுலகின்
குஞ்சுக் குழாம்களைக்
குவலயம் கண்டது!

அநேகக் கவிஞருக்கு
அவரின்- கவிதை நேரம்தான்
ஊட்டச் சத்து!
ஆகையால்தான்
அவர்மேல்- எனக்கு
ஏகப்பித்து!

ஓராயிரத்து ஏழில்-
ஒப்பிலா மனிதரை
ஈராயிரத்து ஏழில்-
ஐந்தாம் முறையாக
அளப்பறிய நிகழ்ச்சிப்
படைப்பாளராய்
சிங்கை ஏற்றுக்கொண்டது!
அப்படி ஏற்றதனால்
அடங்காப் புகழைத்
தன்முடிமேல்
ஏற்றிக்கொண்டது!

அகரம். அமுதா

1 கருத்து: