வியாழன், 30 அக்டோபர், 2008

கண்ணீர் அஞ்சலி!

யாரது-
யமனா?
நாய்க்கும் நீ
சமனா?

மரணமென்னும் கைகளால்-
மூக்குவிடும் மூச்சை;
நாக்கில் எழும் பேச்சை;
இதயத் துடிப்பை;
இமைகளின் படபடப்பை;
உலுக்கி உலுக்கி
உதிரச்செய்யும் மந்தியே!

உயிர்குடித்தே
உவகை அடையும்
உந்தியே!

எப்போதும்; எஞ்ஞான்றும்
இடுக்கண் தரவே
எழுதப்படும் தந்தியே!

இறப்பை ஈயவே
இதய வீட்டின் வாசலில்
காத்திருக்கும்
கருணையற்ற நந்தியே!

விந்தையே வியக்கும்
விந்தையை;
தன்னெழுத்தால் வாசகர்க்கு
இன்கண் அளித்த -கள்
மொந்தையை;

விருத்தம் தீண்டா
வியப்பை;
ஐம்பொறி என்னும்
குரங்கேறிக் குலுக்காப்
பொருப்பை;

அறிவியல் அறிவை -தன்
ஆறறிவில் தேக்கிய இருப்பை;
உடலுள் உறைந்த
உயிரென்னும் அருவ
உருப்பைப் பிய்த்து
ஓடி ஒளிந்தாயே!

யாக்கைக்குள் உயிரைத்
தேக்கி ஒளித்தாலும்
உட்புகுந்து ஊடுருவித்
தேடிக் கலைத்தாயே!
-- -- --ஓ! ரங்க நாதா!
ஸ்ரீ ரங்க நாதா!
நின்பேர் கொண்டவனை...
நின்ஊர்வழி வந்தவனை...

காலனெனும்
கள்வன்
பாசக்கயிறென்னும்
நாசக்கயிறெறிந்து
உடலை விட்டான்;
உயரைச் சுட்டான்;
மடலை விட்டான்;
முகவரியைச் சுட்டான்!

முறையா?
மண்ணுலகில்
மனிதராய்ப் பிறத்தலும் ஓர்
குறையா?
-- -- --எழுத்துலகின் சகாப்தமே!
நாவல் வாசிப்போர்
நாவெல்லாம் பலுக்கும்
மகாப் பதமே!

சிறுகதைச் செம்மலே!
கவின்தமிழ்த்தாய் -தன்
காதுகளில் அணிந்துகொண்ட
கம்மலே!

பண்ணறிந்த பாவலனே!
பாரறிந்த நாவலனே!
வசன கர்த்தாவே!
விசனத்தில் விட்டாயே!

நீடுதுயில் நீகொண்டால்
ஏடுதுயில் கொள்ளாதா?

கற்றதும் பெற்றதும்நாம்
கடுகளவே என்றிருக்கக்
கற்பித்தது போதுமென்று
காலனிடம் சென்றாயா?

தரமான படைப்பையெல்லாம்
தரணிக்குத் தந்துவிட்டு
மரண அழைப்பேற்று
மனமுவந்து சென்றாயா?
-- -- --
ஐயனே!
எழுதுகோல் ஏந்துங்
கையனே!

புதுமை விரும்பியாய்ப்
புத்தாக்கச் சிந்தனையை
வளமான உரைநடையில்
வார்த்தவனே!

உன்போல்
புதுமைசெய்யப்
புகுந்தாரை
ஆதரித்து ஆனமட்டும்
ஆர்த்தவனே!

"எனக்குப் பிடித்த கவிதை"
என்றெழுதிக்
கணக்கில்லாக் கவிஞர்களை
காசினியோர் கண்முன்
சேர்த்தவனே!

ஈசல் எதிர்த்தா
எரிமலை சாயும்?
ஈர்க்குப் பட்டா
இளங்கதிர் மாயும்?
கட்டுமரம் தடுத்தா
கடலலை ஓயும்?
கார்முகில் உரசியா
கவின்நிலா தேயும்?

கூடுபுகுந்து -உன்
உயிர்குடித்த கூற்றுவன்
ஏடுபுகுந்து -உன்
பீடழிக்க மாட்டாது
தோற்றான்;

தான் தோற்றதைத்
தக்கணமே தரணியறிய
ஏற்றான்!

மரத்தை அரிக்கும்செல்
வைரத்தை அரிப்பதில்லை...
கரத்தைச் சுடும்தீ
அறத்தைச் சுடுவதில்லை!

அகரம்.அமுதா

2 கருத்துகள்: