அவன்-
ஏடகம் நடத்தும்
நாடகம் என்பது-
தவ்வித் தாவும்
நவ்வியை ஒத்தது...
விருத்தம் காணும்
அருத்தம் என்பது-
தண்டகம்
தண்ணீரில் வைத்து
முகம் காட்டும்
முண்டகம் ஒத்தது!
== == ==
அவன்-
கன்னல் பற்றிக்
கவிதை கழறினால்-
கேட்போர்
காதுகள் இனிக்கும்...
விழிநீர் பற்றி
விருத்தம் விரித்தால்-
காண்போர்
கண்கள் பனிக்கும்...
தீயைப் பற்றிச்
செய்யுள் செய்தால்-
படிப்போர் பார்வை
பற்றித் தகிக்கும்...
பனியைப் பற்றிப்
பாக்கள் புனைந்தால்
வெந்த நெஞ்சம்
வெப்பைத் தணிக்கும்!
== == ==
அவன்-
தவழும் வயதிலும்
சந்தம் தீட்டியவன்!
விருத்த வயதிலும்
விருத்தம் விரிப்பவன்!
அவன் தீட்டினால்
கலிப்பா -
களிப்பாகும்!
ஆசிரியப்பா -
ஆச்சரியப்பா ஆகும்!
பாவலம் கொழிக்கும்
பா நிலம்- அவனுள்
பாவலம் இல்லையெனப்
பகருவதோ-இருகண்
குருடான
கோகுலம்?
நூல்இடை ஒசியும்
நுண்தமிழை-
நூல்நடை கொண்டு
நுகர்ந்தானைக்
கவியிலை-எனக்
கழருவதோ-ஓர்
கால்நடை?
பழத்தைப் பற்றிப்
பழிச்சொல் பகர்வது
காலத்தால் கனியாக்
காயா?
ஞாயிறைப் பற்றி
நவைகள் நவில்வது
ஞானத்தால் தெளியா
நாயா?
எட்டைப் பற்றி
எள்ளித் திரிவது
எட்டிற் சிறிய
ஏழா?
இரத்தம் பற்றி
இழிந்தன உரைப்பது
சிரங்கில் வழியும்
சீழா?
வாளியால் முகப்பதால்
வங்கக்கடல் வற்றிடுமா?
ஈயிறகின் காற்றுபட்டு
இமயம் இற்றிடுமா?
== == ==
கவி
குன்றேறி உலுக்குவதால்
ஆடாது;
அசையாது புவி!
மறம்
மல்லுக்கு நிற்பதால்
ஆடி அடங்காது;
ஓடி ஒடுங்காது அறம்!
தீவட்டி கொண்டு
தீய்ப்பதால்-
வாரணம்
வண்ணம் மாறா; -அவ்
வண்ணம் மாறா
வாரணம் நேரன்றி
"பாத்தென்றல்" என்னும்
பசுந்தென்றலே!-நீ
வேறா?
பொருள்:- நவ்வி -மான்; முண்டகம் -தாமரை; விருத்தம் -மூப்புப் பருவம், விருத்தப்பா; கோகுலம் -குரங்கு; கவி -குரங்கு; வாரணம் -சங்கு
அகரம். அமுதா
i think the archive you wirte is very good, but i think it will be better if you can say more..hehe,love your blog,,,
பதிலளிநீக்குநன்றிகள்.
பதிலளிநீக்கு