செவ்வாய், 24 ஜூன், 2008

இயற்கையைப் பாடுவேன்!

நேசக் கையை
நீட்டி யழைத்து
நிற்குது கவின்மாலை! -நெஞ்சை
நிறைப்பது கவிமாலை!


வாசம் பரப்பி
வண்டை அழைப்பது
வண்ண மலர்சோலை! -என்னை
வடிப்பது கவிச்சோலை!

மாலை வந்தபின்
மதியும் வந்தே
மங்கல வானெழுதும்! -விண்மீன்
வாழ்த்திசைப் பண்ணெழுதும்!


சோலை வந்தபின்
சில்வண் டெல்லாம்
சொக்கியா நின்றுவிடும்? –பூக்கள்
வெட்கத்தை வென்றுவிடும்!

உருகும் மேகம்
உயர்த்திப் பிடித்த
உறுவில் மையெழுத்து! -மின்னல்
ஒளியோ கையெழுத்து!


அருவிக் குழந்தை
ஆறே மங்கை
ஆழி மூப்பாகும்! -கரைக்கு
அலையே சீப்பாகும்!

கயற்கண் காரிகை
கயமை சமூகம்
கண்டிடு கவிதையிலே -அவைதான்
கவிதைகள் என்பவனே!


இயற்கைக் கவிஞன்
எழுதாக் கவிகள்
எழுதுதல் என்பொறுப்பு! -இதிலேன்
இடுகிறாய் பிடிநெருப்பு!

அகரம்.அமுதா


3 கருத்துகள்:

  1. யாரிட்டார்கள் பிடிநெருப்பு. நீ எழுதுவதைப் படிக்க நாங்கள் இருக்கையில். இயற்கைப் பாடல் அருமை. ;-)

    பதிலளிநீக்கு
  2. can you email me: mcbratz-girl@hotmail.co.uk, i have some question wanna ask you.thanks

    பதிலளிநீக்கு