செவ்வாய், 3 ஜூன், 2008

செல்வம்!


தழைத்த குமுதம் உடனிருந்தும்
அழுக்குத் துணிசேர் தண்ணீர்போல்
உழைப்போர் கைசே ராதேய்ப்போர்
உள்ளங் கைசேர் தரவியமே!

விலகிச் செல்லும் உறவுகளை
விரைந்தே ஒட்டும் செயலதனால்
நலஞ்சேர் தமிழில் நயமுடனே
நவிலும் பெயரது பசையன்றோ!

உள்ளார் இல்லார் எல்லாரும்
உள்ளிப் பதுக்கினும் ஓரிடத்தில்
நில்லா மல்நீ செல்லுதலால்
செல்வ மெனும்பேர் பெற்றனையோ?

மாசை மனதில் வைத்தோர்தம்
மடியோ டும்நீ சேருதலால்
காசென் னும்பேர் பெற்றனையோ?
காசினி யில்சிறப் புற்றனையோ?

மனமென் பதில்லா மாந்தரொடும்
தனமே! உனக்குத் தொடர்புண்டு...
குணமே இல்லாப் பேருடனும்
பணமே! உனக்கு நட்புண்டு...

நாநய மில்லா பேர்களையும்
நாடும் உன்பேர் நாணயமாம்...
ஆனபேர் யாவிலும் பொருளுமில்லை
ஆயினும் பொருளுமுன் பேர்பெறுமாம்!

அகரம்.அமுதா

2 கருத்துகள்: