சனி, 16 மே, 2009

தமிழ் எங்கள் தமிழ்! (1)

கதிரே உலகின் கருப்பை; தமிழே
முதிர்மொழிக் கெல்லாம் முதல்!

முதலாந் தமிழை மொழிக! உளதோ
அதனிற் சிறந்த அமிழ்து!

அமிழ்தினும் ஆன்ற அருமை உடைத்து
தமிழினும் உண்டோ தலை!

தலையே உடலின் தலைமை; தமிழே
உலகின் மொழிகட்(கு) உயிர்!

உயிராம் உயர்தமிழ் ஓம்புக; அன்றேல்
உயிரை மயிர்போல் உதிர்!

உதிக்கும் அறிவும்; உயர்தமிழை ஓம்ப
மதிக்கும் உலகும் மகிழ்ந்து!

மகிழப்பா! மார்தட்டு; மாண்தமிழ்கா; இன்றேல்
இகழப்பா; தீர்ப்பாய் இடர்!

இடர்வரின் வீழ்த்தி எழுவாள்; தமிழாம்
மடவரல் என்பேன் மலைத்து!

மலைப்பே மிகினும் மலையாதச் செய்யிற்
களைகள் களைதல் கடன்!

கடமை; தமிழைக் கடைபிடி; இன்றேல்
மடமை; புதராம் மனம்!


அகரம் அமுதா

5 கருத்துகள்:

  1. அருமையான குறள் அந்தாதி.வாழ்த்துகள்.


    //மகிழப்பா! மார்தட்டு; மாண்தமிழ்கா; இன்றேல்
    இகழப்பா தீர்ப்பாய் இடர்!//

    பொருள் முழுதாகப் புரியவில்லை விளக்கவும்.

    //இடர்வரின் வீழ்த்தி எழுவாள்; தமிழாம்
    மடவரல் என்பேன் மளைத்து!

    மளைப்பே மிகினும் மளையாதச் செய்யிற்
    களைகள் களைதல் கடன்!
    //
    மளைப்பு - பொருள் கூரவும்.

    பதிலளிநீக்கு
  2. ///// //மகிழப்பா! மார்தட்டு; மாண்தமிழ்கா; இன்றேல்
    இகழப்பா தீர்ப்பாய் இடர்!//

    பொருள் முழுதாகப் புரியவில்லை விளக்கவும்./////

    இப்பாடலுக்கு முன் பாடலையும் சேர்த்துக்கொண்டு பொருள்காண வேண்டும்.

    //உதிக்கும் அறிவும்; உயர்தமிழை ஓம்ப
    மதிக்கும் உலகும் மகிழ்ந்து!

    மகிழப்பா! மார்தட்டு; மாண்தமிழ்கா; இன்றேல்
    இகழப்பா தீர்ப்பாய் இடர்!//

    முதல் பாடலின் பொருள் -"தமிழைப் பேணுவதால் அறிவு வளர்ச்சி பெறும், உலகமும் உன்னை வணங்கும்" என்பதாம்.

    அதன் தொடர்ச்சியாகப் பொருள் காண்போமானால், "உலகம் போற்றும் தமிழ்ப் பேணும் செயலை மகிழ்ச்சியோடு செய்வாயாக. தமிழ்க்கு இடர்வரின் மார்தட்டி எதிர்நின்றுக் காப்பாயாக. அப்படி நீ செய்யாது போனால் அச்செய்கை உனக்கு இகழைப் பெற்றுத்தரும். ஆதலால் தமிழுக்குண்டான இடரைத் தீர்ப்பாயாக" என்பதாம்.

    மன்னிக்க. மலைப்பு என்பதைத்தான் மளைப்பு என்றெழுதி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி அமுதா இப்போது பிடிபடுகிறது பொருள். அருமையான அந்தாதி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. ஏதோ கொஞ்சமாய் புரிகின்றது.. கருத்து சொல்லும் அளவிற்கு புரியவில்லை .. நன்றாக படித்துவிட்டு சொல்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  5. ஏதோ கொஞ்சமாய் புரிகின்றது.. கருத்து சொல்லும் அளவிற்கு புரியவில்லை .. நன்றாக படித்துவிட்டு சொல்கின்றேன்..

    பதிலளிநீக்கு