ஞாயிறு, 23 நவம்பர், 2008

என் பாடல்!

செந்தமிழில் சொல்லெடுத்துத்
தீஞ்சுவைதன் னில்குழைத்துச்
செய்திடுவேன் கவிதைஒரு நூறு! -இந்த
வையமதில் துயில்களையும் பாரு!

காசில்லாப் பேர்களையும்
கனிவுடனே என்கவியில்
ஆசையுடம் ஆசுகவி படிப்பேன்! -அதனை
நேசிப்போர் வாழ்வுபெறும் அடைத்தேன்!

உழைப்பதனால் உயர்பவரை
உண்மைசொல்லும் உத்தமரை
ஓர்ந்துகவி பாடுமென்றன் மனது! -அவர்தாம்
உலகமென்னும் ஆலமதன் விழுது!

முதலாளிப் போர்வையிலே
தொழிலாளர் வியர்வையினை
உறுஞ்சுகின்ற பேடிகளைச் சாடும்! –அதனை
உணர்ந்துதிருந் திடஉயரும் நாடும்!

உழைப்பவர்க் கென்கவியில்
ஓய்விருக்கும்! ஏய்ப்பவரை
எள்ளிநகை ஆடிவிடும் பாக்கள்! –அதனை
அல்லகவி என்பவர்கள் மாக்கள்!

முயற்சியில்லா மூடர்களை
முச்சந்திக்கே அழைத்து
முடிந்தவரை என்கவிதை சாடும்! –அதிலே
முயலாமை என்றமுனி ஓடும்!

சத்தியமாய்க் கனிகையரை
ஒத்திவைத்த விதவையரைப்
பாடுபொரு ளாய்க்கொண்டு படிப்பேன்! -அவர்தம்
பாடுயரப் பாடுபட் டுழைப்பேன்!

எத்தனையோ புலவர்கள்
இயற்றிவைத்தக் கவிபடித்தும்
இப்புவியே திருந்தாத போதும் -என்றன்
ஒற்றைச்சொற் கிணங்குமது போதும்!

காதலர்க் கென்பாடல்
கன்னலென இனித்திருக்கும்
காதலினும் என்பாடல் சிறப்பு! -இதிலே
கண்டுசொல்ல ஏதுமுண்டோ மறுப்பு?

எழிலனைத்தும் ஏற்றிருக்கும்
இயற்கையினை என்பாடல்
தொழுதபடி பாடிநிற்கும் நாளும்! -அதனால்
அழிவில்லை என்கவிக்கெந் நாளும்!

முடியுமென்றால் என்கவியை
முடிந்தவரை நீயோது
மூடியகண் களிரண்டும் திறக்கும்! -அறிவும்
முழுநிலவாய்த் தோன்றியொளி பெருக்கும்!

அகரம்.அமுதா

2 கருத்துகள்: