சனி, 30 ஆகஸ்ட், 2008

இதுவா நட்பொழுங்கு?

தேளைப் போலக் கொட்டும் கேளை
நாளும் நாடி நட்புற்றேன் -அது
வேளை பார்த்துக் கொட்டுவ தென்றன்
மூளைக் கேட்டிட துடித்திட்டேன்!

வானம் என்றே பேனை எண்ணி
நானென் தலைமேல் இடந்தந்தேன் -அது
ஊனைக் கடித்தென் உதிரம் உண்ணக்
காணும் போதோ மிகநொந்தேன்!

நஞ்சை நறவம் என்றே எண்ணி
நெஞ்சில் வைத்துக் காத்தேனே –எனை
வெஞ்சினத் தாலது வஞ்சனை செய்ய
விழிநீர் கொட்டித் தீர்த்தேனே!

பாலைக் கேட்டால் பருகக் கள்ளிப்
பாலைத் தருவதா நட்பொழுக்கு? -அது
நாளும் நட்பெனும் போர்வைக் குள்ளே
நடாத்து கின்ற கற்பழிப்பு!

எத்தனை கற்றுத் தெளிந்தி டினு(ம்)இவ்
எத்தர் நெஞ்சம் புரிவதில்லை -அவர்
எத்தனை யாய்இன் சொற்கள் சொல்லி
ஏய்ப்பினும் ஏய்ப்பது தெரிவதில்லை!

சேயைப் போலே மார்பில் மிதித்தால்
தாயைப் போலே பொறுத்திடுவேன் -கொடும்
பேயைப் போலே துன்பம் தன்னை
ஈயப் போந்தால் ஒறுத்திடுவேன்!

அன்பா லென்னை ஆள்வோர்க் கென்போல்
நன்றி காட்டும் நாயில்லை -சுடும்
வன்சொல் லாலெனை வதைப்போர்க் கென்போல்
துன்பம் ஈயும் ஊழில்லை!

அகரம்.அமுதா

2 கருத்துகள்: