சனி, 30 ஆகஸ்ட், 2025

பிணவீடு!


ஓ...ன்னு கெடந்தே
ஒழுவுது மச்சிவூடு...
ஏன்னுபோய்ப் பாத்தா
எழவுஊடு... – வான்புகழ
வாழ்வாங்கு வாழ்ந்தமவன்;
மாநிலத்த ஆண்டமவன்;
வீழ்வான்னு யார்நெனச்சா
வே! 01
ஊரு தலையாரி
ஊட்டுக்குச் சொல்லிஉடு...
சீரு கொணர்வார்க்குச்
சேதிவுடு… – பேருக்குச்
சொல்லி வரவேணாம்,
சொந்தபந்தம் நூறிருக்கு,
எல்லார்க்கும் போய்ச்சொல்
எழவு! 02
எட்டூரு தாண்டி
இளயமவ வாக்கப்பட்டு
ஒட்டுறவா வாழ்ந்திருக்கா
ஊர்மெச்ச; – சட்டுன்னு
பீதி கிளப்பாம பேசி
அழைச்சிவர
ஆதிமூலத் தான
அனுப்பு! 03
தென்னங் குருத்துல
தோரணங்க கட்டிவா..!
வன்மூங்கில் பாடைக்கே
வாங்கிவா..! - முன்னால
வாச லுலசாத்த
வாழமரம் வெட்டிவா..!
வாசப்பூ மாலகட்டி
வா..! 04
கொட்டும் பறமோளம்
கொட்டட்டும்; பூந்தேரு
கட்டும் பணி,கல
கட்டட்டும்; - வெட்டியான்,
வீட்டுத்தோப் போடகுழி
வெட்டட்டும்; சாராயம்
போட்டவன்லாம் ஆட்டத்தப்
போடு! 05
சாரசா ரையா
சனம்வருது; துக்கத்தில்
யார எவரதான்
தேத்துறது? – ஊரழுத
கண்ணீர் அவுத்துவுட்ட
கால்செருப்பக் கொண்டுசெல்ல...
உண்ணாத வாய்க்கில்ல
ஓய்வு!? 06
மண்டையில மண்டையில
மாருல மாருல
கண்ட படியடிச்சிக்
கத்துனா – தொண்டதண்ணி
வத்துமே யல்லாம
மாஞ்ச உசிர்வருமா?
செத்தநேரம் குந்து,வரும்
தெம்பு! 07
மாத்திவெக்க வேணும்
மடிநெறயச் சில்லரைய...
காத்தருக்க வேணாம்,
கடன்நிறைய... – சேத்துவெச்ச
சொத்துக்குச் சண்ட
தொடங்கிடக் காத்திருக்குப்
பத்துக்கும் மேல
படை! 08
செவுட்டுப் பயக்கிட்டச்
சேதிசொல்லி உட்டா
நவுத்தி வருவானா
நாதி? – அவுத்துவுட்ட
ஆட்டுமந்த போல்சனம்
அந்திக்குள் ஊர்வருமா?
போட்டுவெக்க வேணாம்
பொணம்! 09
வாழ்ந்த கதசொல்லி
வாயார வாழ்த்துறவன்
தாழ்ந்த கதசொல்லித்
தாழ்த்துமுன் – சூழ்ந்தழுவும்
பெண்களெலாந் தள்ளப்
பிணத்த எடுத்துறணும்...
விண்ணோக்கி வீசுடா
வேட்டு! 10

மழையோடு கிழவியின் மல்லிகைப் பேச்சு!

 

வாங்கிஎங் கூர
வழங்குதே உள்ள…ஒரு
வீங்கிய பாத்தரமும்
வீட்டிலில்ல... - ஓங்கி
ஒசக்க உறுமி
ஒழுவும் மழயே!
கசக்கிட வேணாமே
கண்! 1
மோட்டுவள ஓட்டவழி
நோட்டமிடச் சூரியனார்
நீட்டுமொளி சொல்லியா
நீவந்தே? - காட்டிருட்டில்
கண்தெரியாப் போதும்
கனகச் சிதமாக
முண்டுறியே வந்தெனக்கு
முன்!? 2
எத்தன ஓட்ட
இருக்குது கூரையில
அத்தனயும் எண்ணி
அலுக்காம - சத்தமாச்
சொல்லிட்டுத் தாம்போவ…
சொல்லா மலாபோவ..?
தொல்லயாப் போச்சுன்
தொணப்பு! 3
குறுகுறுக்குதே பார்!
குடிச... நானாஉன்
கிறுகிறுப்பக் காட்டக்
கெடச்சேன்? - சுறுசுறுப்பாச்
சுத்தி அடிக்கிறியே!
சொல்லியாவப் போவதென்ன
புத்தி ஒனக்கில்லாப்
போது? 4
வாசலோடப் போவும்
வருஞ்சனம்; நீமட்டும்
ஆசயோட உள்ள
அமரவர... – பேசத்
தொணயாக் கெழவிக்கு
தோதாக வாச்ச...
தெனமுமிது போலவந்து
செல்! 5
ஊசியில நூலெடுத்து
உச்சிவான நாந்தைக்கப்
பேசியொரு சந்தர்ப்பம்
பெற்றுத்தா... – மாசிமழ
மண்ணுக்கு வந்தாஎன்
மண்குடிச மண்ணாவும்;
கண்ணுல்ல...! நீகருண
காட்டு! 6
பசியில நானே
பரிதவிச்சிப் போறேன்
நிசியில நீவந்து
நின்னா... – மசிச்சிக்
கொடுக்கஒரு கூழிருக்கா?
குந்தவச்சிப் பேச,
படுக்க,ஒரு பாயிருக்கா
பார்! 7
மேலருந்து வாரியே..!
மச்சானப் பாத்தியா..?
காலலம்ப ஆளிருக்கா..?
காசிருக்கா..? – நாலெலும்பு
நாயகன் போனபின்னே
நாதியத்துப் போனேனே..!
வாயருந்த நஞ்சிவாங்கி
வா! 8
-அகரம் அமுதன்-

தொட்டிமீன்

 

தொட்டிமீன் ஆகித்
தொகைக்கு விலையாகி
வெட்டிமீன் ஆனேன்
வெறுமையில்; – எட்டுக்கு
நாலில் நகர்கிறது
நாட்கள்; கனவிலும்
காலின்கீழ் கண்ணீர்க்
கடல்! 01
நான்குநாள் மாற்றாத,
நன்னீரே ஊற்றாத,
மீன்தொட்டி என்னும்
வெளிர்சிறையில் – நான்பொறுக்க
ஆகாத துன்பத்தில்
ஆயுள் கழிகிறது
சாகாமல் உள்ளம்
சலித்து! 02
மண்புழுவும் வேண்டாம்
மனிதா! மனமிறங்கிக்
கண்டொரு தூண்டிலிடு
கவ்வுகிறேன்; – கொண்டபெரும்
சோகத்தைச் சொன்னால்
சுமையறுமா? சட்டியிலே
வேகத்தான் வேண்டும்
விடு! 03
தொட்டிநீர் மாறலாம்
தொட்டியும் மாறலாம்
மட்டிலா என்கண்ணீர்
மாறுமா? – மொட்டுவிடும்
காற்றுக் குமிழிபோல்
கண்ணாடித் தொட்டிவிட்டுத்
தோற்றம் மறையுமா
சொல்! 04
பதங்களில் வேண்டுமெனில்
பார்க்கலாம்; யார்க்கும்
சுதந்திரம் என்பதெல்லாம்
சும்மா; – மதங்களும்
கொள்கையும் வீடும்
கொடுஞ்சிறைதான்; இங்கவற்றைத்
தள்ளுவதும் கூடத்
தளை! 05
நாலடிக்குள் வாழ்க்கை
நடத்துகிறேன்; நீங்களிந்த
ஞாலத்துள் வாழ்வை
நகர்த்துகிறீர்; – காலடிகள்
நான்குவைத்தால் தீர்ந்துவிடும்
ஞாலத்தோ டொப்பிட்டால்
மீன்தொட்டி ஞாலத்தின்
மேல்! 06

சாலை ஓவியன்!

 

ஒட்டிய கன்னம்,
உருக்குலைந்த தோற்றம்,அவன்
கட்டிய வேட்டி
கடுங்கந்தல், – பட்டினியைச்
சாவுக்கு உணவாக்கிச்
சாலை தனில்வரைவான்
தேவுக்கு அலங்காரம்
செய்து! 01
தெருவாய் அமர்ந்திவன்
தீட்டோ வியத்தில்
திருவாய் மலர்ந்திருக்கும்
தெய்வம்; – ஒருவாய்
உணவும் வழங்கா
உதவாக் கரைக்குத்
தினமும் இவனால்
சிறப்பு! 02
சின்னக் கரித்துண்டில்
தேசத் தலைவ(ர்)களை
என்னமாய்க் கண்முன்
எழுப்புகிறான்!; – முன்விழும்
சில்லரைக் காகத்
திறமை செலவழித்தும்
வல்லவனுக்கு இல்லையே
வாழ்வு! 03
காலக் கொடுமையெனக்
காத்துக் கிடக்கின்றான்
காலணா நாலணா
காசுக்கு; – காலமகள்
கண்ணைத் திறந்தாளா?
காலமெல்லாம் சாலைமகள்
கண்ணைத் திறப்பானைக்
கண்டு!? 04
எண்ணமயம் எல்லாம்
எழுதி அதற்கேற்ப
வண்ணமயம் யாவும்
வழங்குகிறான்; – கண்ணமையப்
பெற்றவர்கள் கண்டு
பெயராமல் நிற்கின்றார்
விற்பனம் ஆகவில்லை
வீண்! 05
மாதமெல்லாம் வந்து
மருந்திடுவான் ஊரவர்தம்
பாதமெல்லாம் புண்செய்த
பாதைக்கு; – சேதம்
சரிசெய்யக் கைகளில்
சல்லிக்கா சேது?
கரித்துண்டு தானே
களிம்பு! 06
சாலைச் சிலுவையில்
சாத்துகிறான் ஏழ்மையைக்
காலை முதலே
கடைத்தெருவில்; - மாலையில்
மல்லிகைப் பூப்போல
சில்லரை அஞ்சாறை
இல்லுக்குப் போவான்
எடுத்து! 07
குட்டிக்கண் காட்சியைக்
கொண்டு வருகின்றான்
வெட்டிச் சனமுலவும்
வீதியில் – எட்டிக்
குதித்தங்குக் காண்கின்ற
கூட்டம் திறமை
துதித்தங்குத் தந்ததா
துட்டு!? 08
பிக்காசோ பார்த்தால்
பிரம்மித்துப் போய்விடுவான்;
டக்கர் எனச்சொல்வான்
டாவின்சி; – லக்கில்லா
ராஸ்கல்என் பானே
ரவிவர்மன்; ஏதுமுண்டா
பாஸ்மார்க் எடுத்தும் பயன்!? 09
இந்தக் கரித்துண்டால்
இங்கிவன் தோற்றத்தை
வந்துச் சரிசெய்யும்
வாய்ப்பிருந்தால் – அந்திக்குள்
ஆளத் தொடங்கிடுவான்
அண்டத்தை; ஆண்டவனும்
மீளத் தொடங்கிடுவான்
வீடு! 10

 ஓரமா மேயாமே

ஊரான் வயலரொம்ப
நேரமா மேஞ்சி
மெதிச்சிவெச்சா – வார
பெரச்சனைய நீயா
பிரிச்சிவெப்பே? எந்தப்
பறச்சிமவ மாடும்பான்
பாத்து! 01
வாயக்கட் டாமே
வயித்தக்கட் டாமேநீ
மேயப்போ னாவருது
வில்லங்கம்; – பாயப்போட்டு
அஞ்சி நிமிஷமென்னால்
கண்ணசர ஆவுதா?
கொஞ்சமா கட்டுறநீ
கூத்து? 02
வெதச்சவய எல்லாம்
வெளைஞ்சிவரும் நேரம்
விதிச்சிருக்கா நீபோயி
மேய? – குதிச்செழுந்து
கும்மாளம் போட்டுக்
கொலையறுக்க ஊரான்எங்
கம்மாள ஈப்பானே
அங்கு! 03
கண்ணு முழிபுடுங்கிக்
காக்கைக் கிரையாக்கிப்
புண்ணு முழியிலமண்
போட்டரக்கித் – தண்ணியில
முங்கி எடுத்துன்ன
மூலையிலப் போட்டாத்தான்
இங்கெரிச்ச தீரும்
எனக்கு! 04
நெல்லமேஞ் சாத்தான்
நெறையுமா ஒன்வயிறு
புல்லமேஞ் சாக்காப்
புடைக்காதா? – கல்லுளி
மங்கன்போல் பார்வைய
மாத்தாத, இன்னிக்குன்
பங்கத்த வாங்கலன்னா
பார்! 05
காத்தால போனஉன்னக்
காடெல்லாந் தேடிநாஞ்
சூத்தால் நகந்தே
சொணங்கிட்டேன்; – பாத்தாலும்
பாக்காம மேயுறநீ?
பார்எந்த சாமிவந்து
காக்குதுன்னுப் பாக்குறன்நான்
காட்டு! 06
நொண்டிநொண்டி நீநடக்க,
நோய்ப்பட்டுக் கால்கடுக்கத்
தொண்டியொன்னு போட்டாத்தான்
தொல்லையறும்; – மண்டியில
தேடித் திரிஞ்சிஒரு
தேக்க மரத்துண்டைக்
காடியில ஏத்திவரேன்
கண்டு! 07
வைக்கோலப் போட்டா
வயிறுமுட்டத் திங்காம,
கைக்கோலக் கண்டுங்
கலங்காம, – மைக்கண்ணு
தேடுதா பச்சவய?
தின்னு தெனவெடுக்க
ஓடுதா கால்கள்
ஒனக்கு!? 08
மேச்சவய மேக்கே
விரிஞ்சி கெடக்கயில,
காச்ச வயதெக்கே
காங்கயில, – பாச்சவய
கண்ணுல நிக்கிதா?
கால்கள் பரபரத்து
மண்ணுல நிக்கிதா
மாடு!? 09
உசாரா உனையின்றே
ஓட்டி,எண்ணப் போறேன்
கசாப்புக் கடைக்குவித்தக்
காச; – ரசாக்குபாய்
கேட்டுங் கொடுக்காத
கேனச் சிறுக்கியின்னு
ஆட்டுறியா வால?நல்லா
ஆட்டு 10

 செங்கல் அணையா

தெருவே அரசவையா
அங்கத்தின் அம்மணமே
ஆதரவா – பங்கமற
நீளும் விழிப்பார்வை
நீதிக்குச் சாட்சியா
ஆளுமே ஆண்மை
அரசு! 01
சட்டெனக் கால்தூக்கிச்
சம்மணம் போடாமல்
அட்டணக்கால் போட்டுத்தன்
அம்மணத்தைப் – பட்டென
மூடி மறைத்தவிதம்,
முன்தொப்பை தான்சரிய
நாடி அமர்ந்தவிதம்
நன்று! 02
கொற்றக் குடையெதற்குக்
கொன்றொழிக்கும் வாளெதற்குப்
பற்றியர சாளப்
படையெதற்கு – வெற்றிமேல்
வெற்றி எதற்கு
வெறிகொண்ட போரெதற்கு
வெற்றுக்கை கொண்டானிவ்
வேந்து! 03
அம்பிக்குப் பாடலாம்
அரகரா, இங்கிவனின்
கம்பீரம் எல்லார்க்கும்
கைவரா, – தம்பியிவன்
மூவேந்தர் காணா
முடியாட்சி செய்கின்றான்
நாவேந்தும் மௌனத்தால்
நன்கு! 04
மூக்குச் சலியொழுக
முன்தொப்பை தானொழுக
நாக்கில் உமிழ்நீர்
நறையொழுகத் – தூக்கஒண்ணா
நல்குரவு தேகத்தில்
நன்கொழுக்கக் கண்டபின்னும்
வல்லரசு கட்டுகிறான்
வந்து! 05
என்னஒர் தோரணை,
ஏழ்மையிலும் பூரணை,
மன்னவன் தோற்கடித்தான்
மாரனை, – சின்னவனின்
அம்மணம்போல் நாமும்
அனைத்தும் துறந்துவிட்டால்
கும்மெனத் தானிருக்
கும்! 06
முற்றும் துறப்பான்
முனிவன்; முதன்முதலில்
முற்றும் துறந்தான்
முதல்வனிவன்; – வெற்றுளமே
வேந்தனுக்கு வேண்டுமென்று
வேடிக்கை யாச்சுட்டும்
மாந்தனிவன் நாடில்லா
மன்! 07
குட்டிச் சுவரையே
கோட்டையாய்ச் சுட்டெடுத்த
கட்டிச்செங் கல்லையே
கட்டிலாய் – ஒட்டியுள்ள
சந்தைச்சாம் ராஜ்யமாய்ச்
சார்ந்தாளும் மன்னவனை
எந்தப் பயல்வெல்வான்
இங்கு!? 08

 (நா எழுதலேங்கோ... மல்லையா ப்ராடக்ட் பண்ணிய கூத்து...)

தெக்கிருந்து வீசினா
தென்றல்; கொடியிலே
மொக்கிருந்து பூத்தா
முகிழ்மலர் - சிக்கிருந்து
சீவி முடிஞ்சா
சிகை;உடலை விட்டுவிட்டு
ஆவி பிரிஞ்சா
அனல்!
வெந்தயத்தைத் தின்றா
வெப்பத் தணிவதுண்டு;
பந்தையத்தில் வென்றா
பரிசுண்டு; - சந்தத்
தரிசனங் கண்டா
தரமான பாட்டுண்டு
பரிச்சையில் தேறினா

 ஒருதலை பெற்றும்

ஒழுங்காய் இராது
தருதலை என்றபேர்
தாங்கித் - தெருதலை
சுற்றித் திரிந்து
சுமையாய் உழன்றிருந்து
வெற்றுப் பயலானேன்
வீண்!
அறுதலை நாயகா!
அப்பா!என் பாவம்
அறுதலை வேண்டி
அணைந்தேன்; - பெறுதலைப்
பெற்றபின் நின்றன்
பெயர்மறப் பேனென்று
சற்றும் கருதாமல்
தா!
போதக்கால் நீயென்று
புந்தியில் ஏற்றுன்றன்
சீதக்கால் மீது
சிரம்வைத்தேன்; - ஓதக்கால்
சோதரா! நேக்குச்
சுகந்தரா விட்டாலும்
சோதரா மற்காப்பாத்
து!
பூமாலை சூடிப்
பொருப்பில் அமர்ந்தஉனைத்
தேமாலை கட்டிவந்து
தெண்டனிடேன்; - பாமாலை
கோத்துக்கோத் துன்தாளில்
கொட்டுவேன் பூங்குமரா!
பாத்துப்பாத் தென்னைக்காப்
பாத்து!

என்வயல்!

 

ஞாலும் துவரைவயல்
நன்மணிலாக் கொட்டைவயல்
காலும் சிறுமொச்சை
காய்த்தவயல் - மேலுமிளம்
வெண்டைசுண்டை பூத்தவயல்
வெண்பருத்தி பார்த்தவயல்
அண்டைவே லிக்கிரையாய்
ஆச்சு! 01
வீட்டுக்குப் பக்கத்தில்
வீற்றிருக்கும் தங்கவயல்
மாட்டுக்குத் தீவனப்புல்
வாய்த்தவயல் - கூட்டுக்குள்
குஞ்சுக்கும் பார்த்துணவு
கோணாமல் தந்தவயல்
நெஞ்சுக்குள் இன்று
நெருப்பு! 02
சுற்றிலும் வேலிகள்
சூழச் சுருண்டவயல்
ஒற்றையடிப் பாதையின்றி
ஓய்ந்தவயல் - வெற்றுடம்பாய்
வான்பார்த்துக் கண்ணீர்
வடித்து வறண்டவயல்
தான்பார்த்து வெட்கும்
தனை! 03
நித்தம்என் காற்சுவடை
நெஞ்சில் சுமந்தவயல்
கொத்தும்என் கைப்பிடித்துக்
கொஞ்சும்வயல் - பித்தென்றால்
போய்நான் அமரப்
பொறுமைசொல்லித் தந்தவயல்
தேய்பிறைபோல் ஆனதின்று
தேய்ந்து! 04
அப்பில்லாக் குட்டைக்கு
அடுத்தவயல் சோதனையாய்
முப்புறம்கல் வேலி
முளைத்தவயல் - அப்புறமும்
விற்றுத் தொலைக்க
விருப்பமின்றி விட்டவயல்
கற்றுக் கொடுத்தபெருங்
காடு!
அகரம் அமுதன்.

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

வெட்டியான் வெண்பா


மற்ற வனுக்கு
மறந்தும் குழிபறிக்க
எத்தனிக் காதவன்தான்
என்றாலும் - செத்தவனுக்கு
ஆறுக்கு ரெண்டே
அடியில் பறிப்பதெலாம்
சோறுக்காய்ச் செய்யும்
தொழில்! 01
இற்றைப் பிணந்தூக்கி
நாளை பிணங்க(ள்)வரச்
சற்றே வறுமையைத்
தண்டிப்பான்; – அற்றைமட்டும்
காய்ந்த வயிற்றுக்குக்
காய்ச்சிய கஞ்சியாய்
வாய்த்திடும் வாய்க்கரிசி
வாய்க்கு! 02
தூங்கும் மயானம்
துள்ளி விழித்தது
வாங்கும் பிணத்தின்
வருகையால் - ஆங்கிவனின்
தூங்கா வயிற்றுக்குத்
தூக்கம் கிடைத்தது
ஏங்காமல் செல்லும்
இரா! 03
நீட்டிப் படுத்தவனை
நீள்குழியில் போடுதற்கும்
மூட்டிப் பெருந்தீயில்
முங்குதற்கும் - வாட்டமுடன்
வெட்டியாய் ஊர்நிற்க
வேலைகள் பார்ப்பவன்பேர்
வெட்டியான் என்னே
வியப்பு! 04
செய்தொழில் தெய்வமென்றால்
செத்த பிணமிவனுக்கு
ஐயமின்றித் தெய்வத்தின்
அம்சம்தான்; – பையஇவன்
வெட்டும் கருவறைக்கு
வேறுபெயர் கல்லறையென்று
இட்டவனை அங்கே
இடு! 05
இல்லார் பிணமென்ன?
உள்ளார் பிணமென்ன?
எல்லாமும் ஒன்றே
இவனுக்குச் – செல்வர்
படைபலமா சாவைப்
பயமுறுத்தக் கூடும்?
நடைபிணங்காள்! கட்டும்
நடை! 06