ஞாயிறு, 5 அக்டோபர், 2008

கருநாடகமே!

தஞ்சை உழவனவன் சிந்தும் விழிநீரால்
நஞ்சைநிலம் ஆனதவன் கன்னங்கள் -விந்தையில்லை
கன்னத் தரும்புகின்ற தாடிநெல் நாற்றானால்
பண்ணலாம்முப் போகம் பயிர்!

வேறு

கருநா டகமே! கருநா டகமே!
காவிரி நீரைத் தாராயா?
ஒருதாய் மக்கள் நாமென் பதனை
ஓர்கண முணர்ந்து பாராயா?

நம்மிரு வர்க்கும் காவிரி அன்னை;
நம்மில் வேற்றுமை பார்ப்பாளா? –நீ
நம்மில் வேற்றுமை பார்ப்பது கண்டால்
நற்றாய் அவளும் ஏற்பாளா?

கண்ணீர் விட்டுக் கண்ணீர் விட்டுக்
கழனி உழுது நடுகின்றான் -அக்
கண்ணீர் வற்றிக் கண்ணீர் வற்றிக்
காய்ந்த நிலம்கண் டழுகின்றான்!

ஊருக் கெல்லாம் சோறு போட்டவன்
ஒருபிடி சோறின்றி வாடுகிறான் -அட
நீருக் கன்றோ கைகள் ஏந்தி
நிம்மதி கெட்டு வாழுகிறான்!

நீர்கேட் டெவரும் நேரில் வந்தால்
மோர்கொ டுத்தவன் வாடுவதா? –அவன்
ஏர்பிடித் துழுதிட தண்ணீர் கொஞ்சம்
ஈயென் றால்நீ சாடுவதா?

பாருக் கெல்லாம் சமமழை என்றே
பார்த்து வழங்கும் கார்குலமே! –தண்
நீருக் கிங்கே கைகள் ஏந்தி
நிற்பதோ எங்கள் தமிழினமே?

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பென
மத்தியில் ஆளும் காங்கிரசே! –தமிழ்
மக்கள் படுந்துயர் தீர்க்க ஒணாவிடில்
மரித்தால் என்ன அவ்வரசே?

கருநா டகமே! கருநா டகமே!
காவிரி நீரைத் தாராயா?
ஒருதாய் மக்கள் நாமென் பதனை
ஓர்கண முணர்ந்து பாராயா?

அகரம்.அமுதா

2 கருத்துகள்: