ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2008

ஆசிரியர்!

ஒத்தினம் நாளும் ஓதும்
ஒப்பிலாக் கல்வி தன்னை
நத்திநம் நெஞ்சத் துள்ளே
நடுமாசி ரியர்கள் போற்ற
எத்தினம் உகந்த தென்றே
எண்ணிநாம் விதந்த வேளை
இத்தினம் எழுந்து வந்தே
இசைமாறி பொழியு திங்கே!

தரிசெம்மை உழுது நட்டுத்
தரணிக்குப் புகழைச் சேர்க்கும்
பரிசுத்த உழவர் என்றே
பார்க்கின்றேன் இவரை; அற்றம்
இரிதலைத் தொண்டாய்ச் செய்யும்
இவர்புகழ் தன்னை வானும்
அறிதலை வேண்டி நாமும்
அமைத்திட்ட இந்நாள் வாழ்க!

பொறையோ(டு) அறிவை என்றும்
பொய்த்திடா நற்கு ணத்தைக்
குறையாத கல்விச் செல்வம்
கொடுக்கின்ற வள்ளல் நாளும்
அறிவென்ற ஒன்றை மட்டும்
அமுதென்றே ஊறும் ஊற்றாய்த்
தருவிக்கும் இவர்த கைபோல்
தகைமையை நாட்டில் காணோம்!

பள்ளிக்குப் புழுவாய்ச் சென்றோம்
பட்டென்றே மாற்றி விட்டுத்
தள்ளிநின் றுவகை கொள்ளும்
தன்மையால் சிறந்து விட்டார்
அள்ளியே அறிவை ஈந்தும்
ஆனந்தம் அதிலே கண்டும்
உள்ளத்தால் வாழ்த்தும் இந்த
உத்தமரை உலகம் போற்றும்!

நல்வழி காண வேண்டி
நவின்றிடும் இவர்கள் பற்றிச்
சொல்லியம் பாட வென்றால்
சுந்தரத் தமிழே தீரும்
பல்கலை தேர எம்மைப்
பண்போடு பண்ப டுத்தி
நல்வினை ஆற்றும் அந்த
நல்லோர்கள் வாழ்க! வாழ்க!

அகரம்.அமுதா

1 கருத்து: