ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2008

இருபொருள் வெண்பாக்கள்!

பம்பரமும், செக்கும்!
ஓரச்சில் ஊண்றி உழலுதலால்; கொண்டபொருள்
கூரச்சாற் தாக்கிக் குளைத்தலால்; -பாரப்பா!
சாட்டைக்கே சுற்றுதலால் சாய்ந்தாடும் பம்பரம்
காட்டுமரச் செக்கின்நேர் காண்!

பம்பரமும், பாம்பும்!
மூச்சிரையும்; நின்று தலையாட்டும்; முன்கோபப்
பாய்ச்சலிட்டே கொத்திப் பதம்பார்க்கும்; -பேச்சென்ன
வட்டமிடும் ஆகையால் பம்பரமும் நற்பாம்பும்
இட்டமுடன் நேரென் றிரு!

ஆழியும்;, மாந்தரும்!
ஈகை குணமுளதால்; இவ்வுல காளுதலால்;
வாகாய் ஒலிசெயும்நா வாயுளதால்; -ஆகாயம்
சாருதலால்; உப்பிடுந் தன்னையால் இப்புவியில்
வாரிதிநேர் மாந்தர் வழுத்து!

தோசையும், கோலமும்!
பெண்கள்கை போடும்; அரிசிமா கொண்டாகும்;
கண்கள்போற் புள்ளிபல காணுமதைத் -தின்றுபசி
தீர்க்கும் பலஉயிரும் என்பதனால் தோசையின்
நேர்கோலம் என்றே நவில்!

அகரம்.அமுதா

5 கருத்துகள்:

  1. அருமையான சிலேடை வெண்பாக்கள். இட்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இஃது அடியேனுடையது.

    இஞ்சியும் விலைவாசியும்

    காரஞ் சுரீரெனுங் காய்ந்திடில் சுக்காகுஞ்
    சீரணந் தந்திடுஞ் சூடுதரும் - காரணம்
    பித்தமாகுந் தோற்றங் கரடு முரடாகுஞ்
    சித்தரிஞ்சி ஏறுவிலை நேர்.

    நினைத்தாலே காரம் சுரீரெனும், காய்ந்தால் சுக்காகும், உணவைச் சீரணம் செய்யும் உஷ்ணத்தை அளித்திடும், அதை உடலில் சேர்த்துக் கொள்ளும் காரணம் பித்தம் ஆகும் (ஆகும் - போய் விடும்). பார்க்கக் கரடுமுரடாக இருந்திடும் தன்மைகள் உடையது சித்தர்கள் மருந்து எனக் கொண்டாடும் இஞ்சி.

    விலையேறும் போது மிளகாய் கடித்தது போல் சுரீரென்னும், அப்படியே விலை ஏற்றம் ஏறிக் கொண்டே காய்ந்தால் பொருளாதாரம் சுக்கு சுக்காகும், சீ என்று வருந்தக் கூடிய ரணத்தைத் தருகின்ற சூடு போடும், காரணம் காண நினைத்தால் பைத்தியமாகும், சகிக்க முடியாத கரடுமுரடாய்த் தோற்றமளிக்கும், தன்மைகளுடையது விலைவாசி.

    பதிலளிநீக்கு